AgaraMudhalvan
Epic Legend
Self Love is the Safest Love
விபரமறியாத வயதில் முதல் முறை பூப்பது தான் காதல். அது தோல்வியடைந்தாலும் வெற்றிபெற்றாலும் பின் மறுமுறை வருவதெல்லாம் தேடல்.
நம்மைப் போல ஒருத்தரை அல்லது நம்மிடம் இல்லாத ஒன்றை ஒருத்தரிடம் காணும்போது நமக்கு அவர் மீது ஒரு விருப்பம் உண்டாகிறது.
ஆணாக இருந்தால் எதிரிலுள்ள பெண்ணிடம் ஒரு ஆண்மையை காணுகையில் அது ஒரே பாலின உணர்வினைத் தேடி நட்பு என்ற கட்டத்தை தாண்டி காதலுக்குள் போகிறது.
பெண்ணுக்கும் அது தான், அவள் சந்திக்கும் ஆண் ஒருவரிடம் தனக்கான தோழியொருத்தியின் சாயல் தென்படும்போது அந்த நட்பு காதலாக பரிணமிக்கிறது.
இதில் பெண்ணுக்கு இன்னொரு பெண்ணை விரும்புவதில் சிக்கல் இருப்பது போல ஆணில் காணும் பெண்மையை ஏற்பதிலும் சிக்கல் இருக்கவே செய்கிறது.
மனோதத்துவம் காதலுக்கு கொடுக்கும் விளக்கம் இவ்வளவு தான்.
ஒன்றுடன் காதல் நின்றுவிடுமா என்றால் அது தான் இல்லை. அது தினம் தினம் பசிப்பது போல ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ற பக்குவங்களுக்கு தக்கபடி ஒவ்வொருவரிடமும் தோன்றிக்கொண்டே இருக்கும்.
அழகைப் பார்த்து, அறிவைப் பார்த்து, திறமையை பார்த்து, ஏதோ ஒரு குணத்தைப் பார்த்து வரும் காதலைப் போல ஒருகட்டத்தில் வயது வாலிபம் கடந்த பிறகும் ஒருவருக்கு ஒருவர் தோன்றும் பரிதாபத்தை வைத்துக்கூட ஆறுதலான காதல் வித்தியாசமானதொரு வடிவத்தை பெறத்தான் செய்யும்.
ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் தாவும் காதல் பொல்லாததாகவும் கெட்டதாகவும் பாவமாகவும் துரோகமாகவும் சித்தரிக்கப்படுவதற்கு காரணம் மனிதர்களாகிய நாம் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவர்களாக நம் சமூக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுவிட்டது என்பதால் தான். விரும்பிய நேரத்தில் விரும்பியவரோடு நம்மால் இணைதேடிக்கொண்டே போய்விட முடியாது. போகவும் கூடாது. குடும்ப அமைப்பினை சிதைக்கவல்ல காரணியாக அது மாறிவிடும்.
எல்லாருக்கும் ஒரே போல அந்த பதின்ம (Teen Age) வயதில் காதல் தோன்றிவிடுமா என்றால் நிச்சயமாக இல்லை.
அதற்கான தேவையுடையவருக்கு மட்டுமே அது தோன்றும் .
மற்றவருக்கு வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றலாம்.
காதல் என்ற உணர்வு தோன்றுவதற்கு இதயம் வெருமையடைய (Empty) வேண்டுமாம்.
அந்த வெருமையை நிரப்பத்தான் இந்த உணர்வு தோன்றுகிறது.
திருமணம், குடும்பம் என்றான பிறகு நமக்குள் உருவாகும் ஒரு வெருமை இன்னொருவர் மீது விருப்பங்களை உருவாக்க போதுமானதாகிறது.
அப்படி நம்முள் தோன்றும் அந்நியர் மீதான விருப்பங்களை கட்டுப்படுத்திக் கொண்டு அதனை நல்ல நட்பாக மாற்றி வைத்துக்கொள்ளுதல் தான் நல்ல ஏற்பாடாக இருக்குமேயொழிய முறையற்ற தேடல்கள் நமக்கு சமூகத்தில் அசிங்கத்தையே தேடித்தரும்.
இன்றைய காலகட்டத்தில் கள்ளக்காதலை வைத்து நிறைய நகைச்சுவை துணுக்குகளை காண்கிறோம், எதுவெல்லாம் அவமானம் என்று நினைத்தோமோ அதுவெல்லாம் இன்று இப்படியான நகைச்சுவைகள் காரணமாக "எல்லாம் சரிதான் சமூகத்தில் நடக்காமலா இருக்கு" என்பதாக மிக இயல்பாக்கப்பட்டு வருகிறது.
என்று நாம் முறையற்ற வகையில் ஒன்றைத் தேட ஆரம்பிக்கின்றோமோ பின் அதற்கு முடிவுரையே இருக்காது. நேர்மையாய் அடையும் எதிலும் ஒரு மனத்திருப்தியும் ஆறுதலும் கிடைப்பது போல நேர்மற்றவையில் ஒரு பூரணம் இருக்காது. அது நமக்கு நஷ்டத்தையும் மனநலிவினையும் தான் கொண்டுதரும்.
காதல் என்பது தேவைகளைத் தீர்க்கும்? நேசித்தவர் நம் உடனிருந்தாலும் இல்லாமல் போனாலும் அவருக்காக நலன் நாடும். பெரும்பாலும் இங்கே ஆறுதல் தேடுவதற்குத் தான் காதல் தேவைப்படுகிறது.
நம் இதயத்திற்கான ஆறுதலை நம் மூளையே கொடுத்துவிடும் எனில் வெளியில் இருந்து ஒரு ஆறுதல் தேவைப்படாது.
Self Love is the Safest Love !
NOTE: நீங்க என்னோட Thread படிச்சிட்டு இந்த NOTE பாக்குறீங்களா இல்ல SCROLL பண்ணி NOTE பாக்குறீங்களான்னு தெரியல.
நான் ஆயிரம் சொல்லுவேன் உங்க மனசுக்கு எது பிடிக்குதோ அதை பண்ணுங்க BUT உங்க PERSONAL LIFE AFFECT ஆகாம பாத்துக்கங்க.
BECAUSE உங்கள நம்பி ஒரு ஜீவன் உங்க வீட்ல உங்களுக்காக காத்துட்டு இருப்பாங்க அவங்களுக்கும் கொஞ்சம் IMPORTANCE கொடுங்க.
அதைத்தான் நான் சொல்ல வரேன்.